Friday, June 9, 2023
Home » ராகுல்காந்தி தகுதி நீக்கத்தால் ஜனநாயகம் அழிந்து விட்டது: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

ராகுல்காந்தி தகுதி நீக்கத்தால் ஜனநாயகம் அழிந்து விட்டது: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

by

சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதி நீக்கத்தால், ஜனநாயகம் அழிந்து விட்டது என்று தயாநிதி மாறன் எம்பி கூறினார். சென்னை யானைகவுனி பகுதியில் நடந்து வரும் மேம்பால பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ரயில்வே அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, துறைமுகம் பகுதி செயலாளர் முரளி, மாநகராட்சி அதிகாரிகள், ரயில்வே துறை அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், தயாநிதி மாறன் எம்பி  நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை யானைக்கவுனி மேம்பாலம் 7 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. ஏற்கனவே, சேதமடைந்த மேம்பாலத்தை இடித்துவிட்டு, மீண்டும் புதிய மேம்பாலம் கட்ட கடந்த 2018ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறாததால் 2019ம் ஆண்டு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். தொடர்ந்து, தெற்கு ரயில்வே பொது மேலாளரையும் சந்தித்து, மேம்பால பணிகளை தொடங்க வலியுறுத்தினோம்.  ஆனால், பணிகள் தொடர்ந்து நடைபெறாத நிலையில், கொரோனா காலத்தை பயன்படுத்தி, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என 2020ம் ஆண்டு, மீண்டும் தெற்கு ரயில்வேயிடம் வலியுறுத்தினோம். மார்ச் 15, 2023 அன்று நாடாளுமன்றத்தில் யானைகவுனி மேம்பாலம் தாமதம் குறித்து, கேள்வி எழுப்பியிருந்தேன். இந்த கேள்விக்கு பணிகள் முடிந்து விட்டதாகவே ஒன்றிய துறை அமைச்சர் தவறான பதிலை அளித்தார். இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.9 ஆண்டு பாஜ ஆட்சியில் ஜனநாயகம் அழிந்துவிட்டது. மக்கள் உரிமையை காக்கும் அனைத்து துறைகளையும், அவர்கள் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் வைப்பதுதான் சட்டம்; அவர்கள் சொல்வது தான் தீர்ப்பு என்ற அளவிற்கு நிலைமை இருக்கிறது. 2009ம் ஆண்டு ராகுல்காந்தி சொன்ன கருத்துக்கு, 2 ஆண்டுகள் தண்டனை என தீர்ப்பளித்துள்ளனர். வரலாற்றிலேயே அவதூறு வழக்குக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது இல்லை. பாஜ அரசு வந்த பிறகு, நீதித்துறை மீது மக்களுக்கு சந்தேகம் வருகிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த தீர்ப்பு தான் வருகிறது. இதை அவர்கள் செய்ய முழு காரணம் கர்நாடக பொது தேர்தல்தான். கர்நாடகாவில், பாஜவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. கர்நாடக பாஜவினர், அதிக ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இதை திசை திருப்பவும், நீதி விவகாரத்தை திசை திருப்பவுமே இத்தகைய செயல்களில் பாஜ ஈடுபடுகிறது. ராகுல்காந்தி தகுதி நீக்கத்தால் ஜனநாயகம் அழிந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட கான்ட்ராக்டர்கள் முறையாக பணியை மேற்கொள்ளாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டுவதற்கான நிதியில் எந்த பிரச்னையும் இல்லை. வரும் டிசம்பர் மாதத்துக்குள் யானைகவுனி மேம்பாலம் அமைக்கும் பணி முழுமையாக முடிக்கப்படும்’’ என்றார்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi