சேலம், மே 25:சேலம் வழியே சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 6/5 கிலோவை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று காலை, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்த திப்ரூகார்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசாரும், போதை தடுப்பு பிரிவு போலீசார் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ஒவ்வொரு பெட்டியாக சோதனையிட்டு வந்ததில், முன்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது, 3 பண்டல்களில் 6.5கிலோ கஞ்சா இருந்தது. இதுகுறித்து அப்பெட்டியில் பயணித்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.ஆனால், அந்த கஞ்சாவை கடத்தி வந்தவர் யார் எனத்தெரியவில்லை. இதையடுத்து 6.5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, சேலம் வழியே செல்லும் ரயில்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.