தஞ்சாவூர், ஜூன் 23: திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தியில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 3 சென்ட் பரப்பளவு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிலத்தை மீட்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 1 ஏக்கர் 3 சென்ட் பரப்பளவு கொண்ட சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் உதவி ஆணையர் அறிவுறுத்தலின் படி தனி வட்டாட்சியர்(கோவில் நிலங்கள்) பார்த்தசாரதி முன்னிலையில் தஞ்சாவூர் சரக ஆய்வாளர் பாபு, நில அளவையர் ரங்கராஜ், கீழ திருப்பூந்துருத்தி கிராம நிர்வாக அலுவலர் அபிஷேக், வருவாய் ஆய்வாளர் சரவணன், கோவில் செயல் அலுவலர் சிவராஜன் ஆகியோர் மீட்டு அறிவிப்பு பலகை வைத்து கோவில் வசம் ஒப்படைத்தனர்.