கோவை, ஏப்.22: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது. சாயிபாபா காலனி அழகேசன் ரோடு சந்திப்பில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. 975 மீட்டர் தூரத்திற்கு 16.61 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. 75 கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்ட பணிகள் வேகமாக நடக்கிறது. 23 தாங்கு தூண்கள் கட்டும் பணிகள் பெரும்பாலானவை முடிந்துவிட்டது. 22 செக்மெண்ட்களில் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2 ஆண்டுகளில் பணி முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் முன்பைவிட முன்கூட்டியே சில மாதம் முன்பே பணிகள் முடிந்துவிடும் வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளை காட்டிலும் மேட்டுப்பாளையம் ரோட்டில் பணிகள் வேகமாக நடப்பதாக தெரியவந்துள்ளது. மேம்பாலம் கட்டும் பணிக்கு முன் உதாரணமாக இந்த மேம்பாலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் போக்குவரத்து நெரிசல், குடிநீர் குழாய்கள், சாக்கடை கால்வாய், மார்க்கெட் என கடும் நெருக்கடி பகுதியிலும் மேம்பால பணிகளை வேகமாக நடத்தப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘தாங்கு தூண்கள் பணி முடிந்ததும் மேம்பால தளங்கள் அமைக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் போதுமான இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாகனங்கள் செல்ல ‘யு டர்ன்’ பகுதிகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேம்பால பணி முடிந்தால் இந்த பகுதியில் வாகனங்கள் இன்னும் எளிதாக சென்று வர முடியும்’’ என்றனர்.