மேட்டுப்பாளையம், ஜூலை 20: மேட்டுப்பாளையம்-நெல்லித்துறை சாலையில் உள்ள யுபிஎல் நிறுவனம் அருகே உள்ள ஒரு வீட்டில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாக என்டபிள்யூசிடி நிறுவனர் ஒயிட் பாபுவிற்கு நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. விரைந்து சென்ற அவர் தலைமையிலான குழுவினர், அந்த வீட்டில் பயன்படுத்தப்படாத பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் மலைப்பாம்பை பதுங்கி இருந்தை கண்டனர்.
தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினரிடம் பிடிபட்ட சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அக்குழுவினர் ஒப்படைத்தனர். பின்னர், வனத்துறையினர் அதனை கோத்தகிரி சாலையில் உள்ள காப்புக்காடு பகுதியில் விடுவித்தனர்.


