பூந்தமல்லி, அக். 28: மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, மேடவாக்கம் – பெரும்பாக்கம் சாலை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும், குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரை சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் இருபுறமும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி கூறியதாவது: தற்போது பூந்தமல்லி முதல் போரூர் நெடுஞ்சாலையில் 3.7 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, அதாவது சாலை சீரமைப்பு பணிகள் 75% நிறைவடைந்துள்ளது.
ஆற்காடு சாலையில் 11.6 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, 87% சாலை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. அதேப்போல மேடவாக்கம் சாலையில் 2 கி.மீ நீளத்திற்கு சாலை போடப்பட்டு, 65% சாலை சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாலைகளில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மாதவரம், மற்றும் ராஜிவ்காந்தி சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதியும் சாலை சீரமைக்கும் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சாலைகள் சேதமடைந்தால் உடனடியாக அந்த சாலைகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.