உடன்குடி, மே 20: மெஞ்ஞானபுரத்தில் டூவிலர் மீது டிரக்கர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தாய், தந்தையர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடன்குடி அருகேயுள்ள கந்தபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் கண்ணன்(35). இவரது மனைவி லிங்கேஸ்வரி(29). இவர்கள்து மகன் கிருஷ்ணன் (4). நேற்று கண்ணன் நாசரேத்தில் மகளிர் சுய உதவிக்குழுவில் லோன் பெறுவதற்காக மனைவி, மகனுடன் டூவிலரில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மெஞ்ஞானபுரம் பஜார் பகுதியில் வரும்போது எதிரில் வந்த டிரக்கர், டூவிலர் மீது மோதியது. இதில் கண்ணன் உள்பட மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தான். கண்ணன், லிங்கேஸ்வரி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்கு பதிந்து டிரக்கரை ஓட்டி வந்த வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த கணேஷ்பாண்டி(40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெஞ்ஞானபுரத்தில் டூவிலர் மீது டிரக்கர் மோதி சிறுவன் பலி
0