தூத்துக்குடி, ஜூன் 18: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலி (Senior Citizen App) Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in (கைப்பேசி செயலி) அமைச்சர் கீதாஜீவனால் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய, மாநில திட்டங்கள். மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் இந்த கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவையான விபரங்களை பெற்று பயன்பெறலாம்.