காரைக்கால், ஜூலை 24: காரைக்காலில் மூதாட்டியை தாக்கி 50 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை ெகாள்ைளயடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த அம்பகரத்தூர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமலிங்கம் (82). இவரது மனைவி கணகவள்ளி (76). நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ராமலிங்கம் வீட்டில் இல்லாத நிலையில் கதவை திறந்த அவரது மனைவி கனகவள்ளியை சப்பாத்தி கட்டை கொண்டு 3பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கிவிட்டு வீட்டினுள் நுழைந்தனர். கனகவள்ளி மயங்கிய நிலையில் வீட்டிலிருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பின்னர், வீட்டிற்கு திரும்பிய ராமலிங்கம் வீட்டின் கதவு திறந்த நிலையில் மனைவி கனகவள்ளி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ராமலிங்கம் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ கதவு திறந்து கிடந்த நிலையில் அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அம்பகரத்தூர் புறக்காவல் நிலையத்தில் ராமலிங்கம் புகார் அளித்தார். தலையில் அடிப்பட்டு மயங்கி கிடந்த கனகவள்ளியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, திருநள்ளாறு போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.