புதுச்சேரி, ஏப். 17: புதுச்சேரி முருங்கப்பாக்கம் அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கோயில் பூசாரி வழக்கம்போல் கோயிலை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கோயில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே கோயில் நிர்வாகத்தினர் இச்சம்பவம் குறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோயிலில் அமைக்கபட்டுள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4 மணியளவில் கோயிலுக்குள் மர்ம நபர் புகுந்து உண்டியலை உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் உண்டியலில் இருந்த பணத்தை மட்டும் மூட்டையில் வைத்து கட்டி கொண்டு, சில்லறை காசுகளை எடுக்காமல், மீண்டும் உண்டியலில் போட்டு மூடி வைத்து விட்டு செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முருங்கப்பாக்கம் அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
0