காரமடை, ஜூன் 14: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் “தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு\” நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-2025ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு கடந்த ஜன.25ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வினை தமிழகம் முழுவதிலும் இருந்து 1,43,351 மாணவ, மாணவியர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில், காரமடை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவி பவிஷ்ணி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழகம் முழுவதும் இருந்து தேர்வான 500 மாணவிகளில் 316வது இடத்தையும், கோவை மாவட்டத்தில் இருந்து தேர்வான 19 மாணவிகளில் ஒருவராகவும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.இதன்மூலம், இளங்கலை பட்டப்படிப்பு வரை இந்த மாணவி கல்விக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் அரசின் உதவித்தொகை பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டி வருகின்றனர்.