Monday, June 23, 2025
Home மாவட்டம்சென்னை மீன்பிடி தடைகாலம் நிறைவு பெறுவதால் படகுகளை தயார் செய்யும் மீனவர்கள்: 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு செல்கின்றனர்

மீன்பிடி தடைகாலம் நிறைவு பெறுவதால் படகுகளை தயார் செய்யும் மீனவர்கள்: 14ம் தேதி நள்ளிரவு கடலுக்கு செல்கின்றனர்

by Karthik Yash

தண்டையார்பேட்டை, ஜூன் 11: மீன்பிடி தடைக்காலம் வரும் 14ம் தேதி முடிவுக்கு வருவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தப்படும்.

மீன்பிடி தடை காலத்தின்போது மீன்பிடி தொழில் முற்றிலுமாக தடைபட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொள்வர். அதன்படி, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 850க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த மீன்பிடி தடை காலம் வரும் 14ம் தேதி முடிவுக்கு வருகிறது. அன்றைய தினம் நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க விசைப்படகுகளில் செல்வார்கள். இதையொட்டி, காசிமேடு மீனவர்கள் தங்களின் படகுகள் மற்றும் வலைகள், ஐஸ் பெட்டிகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று, மீன்கள் வரத்து அதிகரித்தால், மீன்களின் விலை குறையக்கூடும், என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi