ஈரோடு,ஜூன்3: ஈரோடு மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு, உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு,தினசரி 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன. இதனால்,பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும். குறிப்பாக, இரவு முழுவதும் வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதால் எப்போதும் பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் பயமின்றி இருக்கவும், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவும், பேருந்து நிலையத்தில், 5 இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, மின் விளக்குகளில் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படுகிறது.இதன் காரணமாக, பாதி பேருந்து நிலையம் இருட்டில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக, விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து விடுமோ என பயணிகள் அஞ்சுகின்றனர். மேலும், பழுதான மின்விளக்குகளால், அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள் சரிவர காட்சி படங்கள் தெரியாததால், குற்ற சம்பவங்கள் நடந்தால், போலீசார் தடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பை கருதி உயர்மின் கோபுரத்தில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு, பயணிகள், பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 5 இடங்களில் உயர்மின் கோபுரங்கள் உள்ளன.ஒரு உயர்மின் கோபுரத்தில் 12 மின் விளக்குகள் உள்ளன. இந்த மின் விளக்குகள் பொருத்தப்பட்டு,5 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதில் ஒரு சில மின் விளக்குகள் பழுதாகி உள்ளது.இதனை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.