திருவள்ளூர், ஜூலை 4: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை இயக்க திட்டத்தினை காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) என்.ஜெ.பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து வழங்கும் காய்கறிகள் பழங்கள், பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதே ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டமானது பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் மற்றும் பயறு வகை விதைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இத்திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக (4ம் தேதி) இன்று தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு வட்டாரம் மேலப்புடி, ஆர்.கே.பேட்டை வட்டாரம் அம்மனேரி, திருவாலங்காடு வட்டாரம் இலுப்பூர், திருத்தணி வட்டாரம் முருக்கம்பட்டு, பூண்டி வட்டாரம் கச்சூர், கடம்பத்தூர் வட்டாரம் கொப்பூர், திருவள்ளூர் வட்டாரம் சேலை, கும்மிடிப்பூண்டி வட்டாரம் புதுவாயல், சோழவரம் வட்டாரம் பழைய எருமை வெட்டிபாளையம், மீஞ்சூர் வட்டாரம் சின்னகாவனம், அம்பத்தூர் வட்டாரம் கீழ்க்கொண்டையார், புழல் வட்டாரம் சென்றம்பாக்கம், எல்லாபுரம் வட்டாரம் வண்ணாங்குப்பம், பூந்தமல்லி வட்டாரம் கருணாகரச்சேரி ஆகிய கிராமங்களில் இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் – தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.