கிருஷ்ணகிரி, ஜூன் 3: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, மின்சார வசதி, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 349 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.98 ஆயிரத்து 100 மதிப்பில் திறன்பேசிகள், 3 பேருக்கு ரூ.9 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகள், 7 பேருக்கு ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 700 மதிப்பில் செயற்கை கால்கள் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், ஆர்டிஓ ஷாஜகான், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.