கோவை, ஜூலை 3: கோவை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் 17 மேல்நிலை பள்ளிகள், 11 உயர்நிலை பள்ளிகள், 37 நடுநிலை பள்ளிகள் 83, ஆரம்ப பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025-26ம் கல்வி ஆண்டில், மாநகராட்சி பள்ளிகளில் 51 ஆரம்ப பள்ளிகள் மற்றும் 8 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 59 பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பருவத்திற்கு ஒன்று வீதமாக மூன்று புத்தகங்களும், மாணவர்கள் செயல்பாடுகள் செய்வதற்கான மூன்று செயல்பாட்டு புத்தகங்கள் வழங்கம் விழா கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 75வது வார்டுக்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியில், எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் கோவை தொகுதி எம்.பி., கணபதி ராஜ்குமார் இப்புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, உதவி கமிஷனர் துரைமுருகன், மாநகராட்சி கல்வி அலுவலர் சி.தாம்சன், மண்டல சுகாதார அலுவலர் வீரன், மாநகராட்சி கல்வி பிரிவு அலுவலர்கள் சிவசாமி, பூங்கொடி, சுகாதார ஆய்வாளர் சலைத், கவுன்சிலர் அங்குலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.