நாமக்கல், அக்.20: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்களின் செல்போன்களுக்கு, இன்று மாதிரி சோதனையாக பேரிடர் கால எச்சரிக்கை வரும் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க, இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, பேரிடர்கால எச்சரிக்கை செய்தி இன்று (20ம் தேதி) செல்பேசிகளுக்கு அனுப்பப்படவுள்ளது. இந்த பேரிடர்கால எச்சரிக்கை தொடர்பாக, பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும், இச்சோதனை நடைபெறுகிறது. இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்றைய தினம் பெரும்பாலானோரின் செல்போன்களுக்கு பேரிடர் கால எச்சரிக்கை, சோதனை அடிப்படையில் விடுக்கப்படவுள்ளது என்ற தகவல் மெசேஜ்களாக தெரிவிக்கப்பட்டது.