வேலூர், ஜூன் 1: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வரும் 7ம் தேதி முதல் 2 வாரங்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும் என சிஇஓக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அரசு பள்ளிகளில் 2023-24ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 2023-2024ம் கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட வரும் 7ம் தேதி பள்ளி திறக்கும் நாள் முதல் 2 வார காலத்திற்குள் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். இப்பேரணிக்கு அரசுப் பள்ளிகள், பெருமையின் அடையாளம் என்று பெயர் சூட்டி, ஒவ்வொரு பள்ளி அமைவிடத்திலும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சேர்ந்து ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டு உள்ள பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து அப்பட்டியலில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.