திருப்புத்தூர், மே 10: திருப்புத்தூர் அருகே தனியார் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் இருந்து நேற்று, 53 பயணிகளுடன் காரைக்குடி நோக்கி தனியார் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. கல்லல் ஆலங்குடி அருகே உள்ள மேல மாகாணம் பகுதியில் திடீரென மாடு குறுக்கே வந்ததால், டிரைவர் பேருந்தை வளைக்க முயற்சித்தார். இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மேல மாகாணம் கண்மாய்க்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர் குப்புசாமி (55), கண்டக்டர் ரவி (49), கூத்தக்குடியைச் சேர்ந்த நாச்சாள் (55), பூரணம் (57), தைனீஸ் (44), கீழே பட்டமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி (27), பண்ணைத்திருத்தியைச் சேர்ந்த அழகப்பன் (46), செல்வி (35) உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நாச்சியாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.