நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி*கீரையைப் பொடியாக நறுக்காமல் பெரிதாக நறுக்க வேண்டும். நறுக்கிய உடன் பயன்படுத்த வேண்டும்.*தண்ணீர் நன்கு கொதிக்கும்போது நறுக்கிய கீரையைச் சேர்த்து ‘ஹைஃப்ளேமில்’ வேகவிட வேண்டும். அளவாக நீர் இருப்பது முக்கியம்.*கீரையின் தண்டுப்பகுதி பாதி வெந்தவுடன் இறக்கி மசித்தால் நன்கு மசிந்துவிடும். அவ்வாறு மசிக்கும் போது கல் உப்பினை அளவாக சேர்க்க வேண்டும். அதே சமயம் கீரையை அதிக நேரம் வேக விட்டால் கீரையில் உள்ள உயிர்ச்சத்து சிதைந்துவிடும்.*ஒவ்வொரு வகைக் கீரையிலும் தனிப்பட்ட உலோகச்சத்து உள்ளது. அதனால் 2 அல்லது 3 வகைக் கீரைகளை சேர்த்து சமைக்கக் கூடாது. இதனால் மொத்த சத்தும் சிதைந்து போகும். உடலுக்கும் பாதிப்பு ஏற்படும்.*புளி மற்றும் எரியூட்டும் மசாலாக்கள் சேர்க்காமல் சமைத்தால் கீரையின் இயல்பான முழுச்சத்தும் கிடைக்கும்.*முருங்கை, அகத்திக்கீரைகள் ஜீரணம் ஆக மிக நேரம் ஆகும். சிலருக்கு வயிற்றுவலி கூட ஏற்படும். அதனால் இவைகளை வேக வைத்து நீரை வடித்து அதனை சூப்பாகப் பயன்படுத்தலாம்.*மழை காலத்தில் கீரை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இதற்குக் காரணம், மழை காலத்தில் பூச்சிகள் கீரை இலைகளின் அடியில் முட்டையிட்டிருக்கும். சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் ஒவ்வாமை, வயிற்றுக் கோளாறுகளைச் சந்திக்க நேரிடும்.*கீரை ஜீரணம் ஆக அதிக நேரமாகும் என்பதால் கீரையை இரவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.*உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமான சிவப்பு ரத்த அணுக்களின் விருத்திக்கு மிக முக்கியமான இரும்புச்சத்து எல்லா வகைக்கீரைகளிலும் பொதுவாக உள்ளது.*தினசரி உணவில் கீரை ஒரு அங்கமாக அமைந்துவிட்டால் குடும்பமே ஆரோக்கியமாக இருக்கும். பெண்களை பரவலாகப் பாதிக்கும் அனீமியா என்ற ரத்த சோகை வரவே வராது.*கீரைக்காக நாம் செலவழிக்கும் சிறு தொகை, ஆயிரக்கணக்காக வைத்தியச் செலவை மிச்சப்படுத்தும். மஞ்சள் உலோகமான தங்கத்தைவிட இந்தப்பச்சைத் தங்கம் என்கிற கீரை பன்மடங்கு உயர்ந்தது.