Thursday, July 10, 2025
Home மாவட்டம்நீலகிரி மலர் கண்காட்சிக்கு தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா

மலர் கண்காட்சிக்கு தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா

by MuthuKumar

ஊட்டி, மே 14: நாளை 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை நடக்கவுள்ள ஊட்டி மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் உள்ள மாடங்களில் மற்றும் புல் மைதானங்களில் தொட்டிகளை கொண்டு அலங்கார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். இவர்களை மகிழ்விப்பதற்காகவும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவும் மே மாதத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், விழாக்கள் சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில், முக்கிய விழாவாக அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண வெளி நாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கிறனர்.

இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி நாளை 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 11 நாட்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. மலர் கண்காட்சியின் போது, ஆண்டுதோறும் பூங்காவில் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, பிக்கோனியா, பால்சன், டேலியா உட்பட பல்வேறு மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.

இந்நிலையில், இந்தாண்டு மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. டேலியா, கிராந்தியம், பால்சம், இசியாட்டிக் லில்லி, பல்வேறு வகையான மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, சால்வியா ரெணுகுலாஸ் போன்ற மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பல வகையான லில்லியம் மலர்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த மலர்கள் தற்போது பூத்துக்குலுங்கும் நிலையில், மலர் கண்காட்சிக்காக மாடங்களில் பூந்தொட்டிகள் அடுக்கும் பணிகள் மற்றும் புதிய கார்டனில் அலங்கார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும், பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், புல் மைதானம் பச்சை கம்பளம் விரித்தார்போல் பசுமையாக காட்சியளிக்கிறது. மலர் கண்காட்சி தினத்தன்று சுற்றுலா பயணிகள் புல் மைதானத்திற்குள் அனுமதிக்கபடுவார்கள். மலர் கண்காட்சியை முன்னிட்டு கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் மலர் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பிரமாண்ட மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi