புவனகிரி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை அடுத்த கிள்ளை அருகே நவாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுந்தரமூர்த்தி(60) மற்றும் காசிநாதன் (55). இவர்கள் இருவரும் மர வியாபாரிகள். இருவருக்கும் தொழிலில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சி.முட்லுாரில் உள்ள ஏ.மண்டபம் அருகே சுந்தரமூர்த்தியை காசிநாதன் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிவு செய்து காசிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.