கடலூர், ஆக. 22: கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரின் கணவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் செம்மண்டலம் வரதராஜன் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் ஜமால் மனைவி ஷர்மிளா (28). இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்த கடலூர் அருகே உள்ள வெள்ளப்பாக்கத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஜெய்பீம் தாசன் (29) என்பவர் மருத்துவர் ஷர்மிளாவிடம் வீண் தகராறு செய்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த ஷர்மிளாவின் கணவர் சம்சுதீன் ஜமால் இதுகுறித்து ஜெய்பீம் தாசனிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர் சம்சுதீன் ஜமாலை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் ஜெய்பீம் தாசன் அடிக்கடி இதேபோல மருத்துவர் ஷர்மிளாவிடம் தகராறு செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷர்மிளா கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்பீம்தாசனை கைது செய்தனர்.