துவரங்குறிச்சி, ஜூன் 12: திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் பகவதி அம்மன் கோயில் உள்ளது. கோயில் பூசாரியாக மூக்காண்டி(53) உள்ளார். இவர் நேற்றிரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது கோயிலின் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பக்தர்களின் காணிக்கை பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புத்தாநத்தம் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
அதில், கோயில் திருவிழா 2 மாதத்துக்கு முன்பு தான் நடந்ததும், உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.10 ஆயிரம் வரை இருந்ததும் தெரியவந்தது. பின்னர் கோயில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.