மல்லசமுத்திரம், ஜூன் 19: மரப்பரை ஊராட்சி கட்டிப்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், மரப்பரை ஊராட்சிக்குட்பட்ட கட்டிப்பாளையம் 7வது வார்டு பகுதியில், சுமார் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வருடங்களாக, 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் ெசய்யப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 4 குடம் அளவிற்கு மட்டுமே குடிநீர் கிடைப்பதால், காசு கொடுத்து குடிநீரை வாங்கி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் அருகில், பல லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. இதுவரை அந்த தொட்டி பராமரிப்பு செய்யவில்லை. எனவே, புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைத்து, இப்பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும். ஜூலை 1ம் தேதிக்குள் குடிநீர் விநியோகத்தை சீராக்கவில்லை எனில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், அதிகாரிகளை கண்டித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தெரிவித்தார்.