மேட்டுப்பாளையம், மே 31: மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்(42). இவருக்கு கீதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். தமிழ்வாணன் மோட்டார் சைக்கிளில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாக மனைவி, மகளை விட்டுப்பிரிந்து தனது தாயாருடன் வசித்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த தமிழ்வாணன் மதுவிற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தமிழ்வாணன் தனது வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.