Wednesday, July 16, 2025
Home மாவட்டம்கடலூர் மனைவியை பார்க்க புதுச்சேரி வந்த சென்னை வாலிபரை கடத்தி சரமாரி தாக்கி கொலை மிரட்டல் மைத்துனர் உள்பட 7 பேர் கைது

மனைவியை பார்க்க புதுச்சேரி வந்த சென்னை வாலிபரை கடத்தி சரமாரி தாக்கி கொலை மிரட்டல் மைத்துனர் உள்பட 7 பேர் கைது

by Karthik Yash

 

புதுச்சேரி, ஜூன் 12: சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (25). இவர், சென்னையில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவரது பாட்டி வீடு, புதுச்சேரி நாவற்குளத்தில் உள்ளது. பாட்டியை பார்க்க அவர் அடிக்கடி புதுச்சேரி வருவது வழக்கம். இந்நிலையில் பாட்டியின் எதிர்வீட்டில் வசிக்கும் காயத்ரி என்பவரை காதலித்து கடந்த 2022ல் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சென்னையில் கணவருடன் வசித்த மனைவி, குடும்பத் தகராறில் கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்நிலையில் மனைவியை பார்க்க பாலாஜி கடந்த 9ம் தேதி இரவு 8 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தார். படேல் சாலையில் மனைவியின் அண்ணன் வினோத்குமார் நடத்திவரும் கடையில் காயத்ரி இருப்பார் என நினைத்து இரவு 11 மணிக்கு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த வினோத்குமார் மற்றும் சிலர், பாலாஜியை சத்தம் போட்டவாறு துரத்தினர். ஓட முடியாமல் நின்றபோது, அவரை சுற்றி வளைத்து வினோத்குமார் உள்ளிட்ட கும்பல் அவரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

மேலும், அவரை இருசக்கர வாகனத்தில் நாவற்குளம் பகுதிக்கு கடத்திச் சென்று இருட்டான பகுதியில் மரக்கட்டை மற்றும் கைகளால் சரமாரி தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் சத்தம் போடவே அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த பாலாஜி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாலாஜியிடம் பெரியகடை போலீசார் புகாரை பெற்றனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து வினோத்குமார் (31), அவரது நண்பர்கள் வசந்த் (26), குணசீலன் (26), கர்ணன் (35), மணிமாறன் (30), வெற்றிச்செல்வன் (31), பிரேம்குமார் (31) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi