மதுரை, மே 7: தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் மதுரை உள்பட பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தினசரி வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸ்க்கும் மேல் பதிவாகி வருவதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இந்தாண்டுக்கான அக்னி நட்சத்திரம் மே 3ம் தேதி துவங்கிய பின் அன்றைய தினம் மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து 2 நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக நேற்று மதுரை மாநகர் மற்றும் புறநகரில் மீண்டும் மழை பெய்தது. மாட்டுத்தாவணி பஸ் நிலையம், விராட்டிபத்து, காளவாசல், பொன்மேனி, திருப்பரங்குன்றம், அச்சம்பத்து, யானை மலை ஒத்தக்கடை உள்பட பல இடங்களில் மழை பெய்து குளிர்வித்தது. கோடைமழை என்பதால் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. மற்ற பெரும்பாலான இடங்களில் குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவியது.