மதுரை, ஜூலை 29: மதுரை விளக்குத்தூண் அருகில் ஜடாமுனி கோயில் தெருவில் உள்ள எல்.என்.எஸ் மகாலில் நேற்று தமிழ்நாடு அரசு கைத்தறித்துறை சார்பாக ஆடி பட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் கைத்தறி கண்காட்சியை கலெக்டர் சங்கீதா துவங்கி வைத்தார். இக்கண்காட்சி நேற்று முதல் ஆக.11ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
இக்கண்காட்சியில் புவிசார் குறியீடு பெற்ற காஞ்சிபுரம், கும்பகோணம், திருவண்ணாமலை பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள் மற்றும் கோவை, திருப்பூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு, கோராபட்டு சேலைகள், மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை காட்டன் சுங்குடி சேலைகள் மற்றும் பவானி ஜமுக்காளம், கால்மிதியடிகள் ஆகிய ரகங்களும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ரகங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.
மேற்படி ரகங்கள் அனைத்திற்கும் ஆடி தள்ளுபடி மற்றும் அரசு தள்ளுபடி 20 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இக்கண்காட்சிக்கு அனைத்து பொதுமக்களும் வந்து பார்வையிட்டு வாங்கி பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. இக்கண்காட்சி துவக்க விழாவில் துணை இயக்குநர் மாதேஸ்வரன் மற்றும் மதுரை சரக கைத்தறித்துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.