ராமேஸ்வரம், ஆக. 5: மண்டபம் அருகே சீனியப்பா தர்ஹா கடற்கரை பகுதியில் மீனவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழக்கரை பரதர் தெருவை சேர்ந்தவர் முகம்மது இபுனு (41). இவருக்கு கருணை என்பவருடன் திருமணம் ஆகி 5 வருடம் முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர் சினியப்பா தார்ஹா கடற்கரையில் ஹபிப் என்பவர் படகில் கடலுக்கு சென்றும், பாசி சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சீனியப்பா தர்ஹா கடற்கரையில் உள்ள ஒரு கட்டிடத்தில் உறங்கிய முகம்மது இபுனுவை கடலுக்கு செல்வதற்காக ஹபிப் அழைக்க வந்தார்.
அப்போது முகத்தில் ரத்த காயங்களுடன் அவர் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஹபீப் கீழக்கரையில் வசிக்கும் முகம்மது இபுனுவின் சகோதரர் பகுருதீன் அலி அஹமதுவிற்கு தகவல் கொடுத்தார். இப்பிரச்னை குறித்து அவர் மண்டபம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார் இறந்து கிடந்த இபுனுவின் உடலை கைப்பற்றி, ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.