வெள்ளிச்சந்தை, மே 20: மணவாளக்குறிச்சி அருகே உரப்பனவிளையை சேர்ந்தவர் முருகேசன் (63). கூலித்தொழிலாளி. அவரது மனைவி ராஜம் (60). இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா (32) என்ற மகளும், சந்தோஷ் (30) என்ற மகனும் உள்ளனர். சந்தோஷ் தற்போது அதே பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். கடந்த 11ம் தேதி முருகேசன் புதிய வீட்டின் மாடி பகுதியில் உள்ள காங்கிரீட் பூச்சுகளில் தண்ணீர் நனைக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் இறந்தார். இது குறித்து ராஜம் கொடுத்த புகாரின்பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
0