தர்மபுரி, செப்.28: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 66 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு எஸ்பி ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து, தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்னை, குடும்ப தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 68 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொண்டு, 66 மனுக்கள் மீது விசாரணை முடித்து வைக்கப்பட்டது. 2 மனுக்கள் நிலுவையில் உள்ளது. முகாமில் டிஎஸ்பி ராமசந்திரன், நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கலைவாணி, அன்பழகன், எஸ்ஐகள் கண்ணம்மாள், மாதையன், மணி, முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.