விருதுநகர், ஜூன் 3: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலை வாய்ப்பு, ரேசன் கார்டு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், பிற்படுத்தப்டோர் நல அலுவலகம் சார்பில் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.5,600 மதிப்பிலான ரூ.1.23 லடசம் மதிப்பிலான தையல் இயந்திரங்களை வழங்கினார். செயற்கை கைது கோரி மனு அளித்த பள்ளி மாணவியின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து ரூ.53 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கை வழங்கினார். மேலும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.53ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால் என மொத்தம் ரூ.2.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ ராஜேந்திரன் மற்றும், நேர்முக உதவியாளர் பிர்தௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் காளிமுத்து மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.