திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி பகுதியில் கலைஞர் திடலில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கத்தில், திமுக சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. அதில், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர். நேறறு காலை மற்றும் மாலை என இரண்டு பிரிவுகளாக பயிற்சி முகாம் நடந்தது. பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிப் பாசறை கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடந்தது. திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, அந்தியூர்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சரும், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு வரவேற்றார்.