லால்குடி, ஏப்.19: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமணமேடு கிராமத்தை சேர்ந்த பார்த்தசாரதியின் மகன் குமரவேல்(46). லால்குடி தாலுகா அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வந்த குமரவேல், போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி போலி வாரிசு சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு லால்குடி பரமசிவபுரத்தை சேர்ந்த தாமஸ் தேவராஜ்(53) உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த மாதம் கிராம நிர்வாக அலுவலர் அம்புரோஸ் கொடுத்த புகாரின்பேரில், குமரவேலை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் விசாரணையின்போது குமரவேல் கொடுத்த தகவலை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த தாமஸ் தேவராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.