புதுச்சேரி, மே 10: புதுச்சேரி சேதராப்பட்டில் பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களை தயாரிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு, கடந்த மாதம் 13ம் தேதி உங்களுக்கு பங்குச்சந்தையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?. பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது. இப்போதைய சூழ்நிலையில் லாபகரமான பங்குகள் எது?. எந்தெந்த நேரத்தில் பங்குகளை விட்டால் லாபம் அதிகம் கிடைக்கும் போன்ற பல்வேறு கேள்விகளுடன் ஒரு வாட்ஸ்அப் லிங்க் வந்துள்ளது. மேலும், நீங்கள் இந்த வாட்ஸ்அப் லிங்க்கில் இணைந்து விட்டால் உங்களுக்கு அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை நம்பி தொழில் அதிபர் அந்த லிங்க்கில் இணைந்துள்ளார். அவருக்கு பங்கு சந்தையை பற்றி சிறிது தெரிந்திருந்ததால் ஒரு சில நாட்களிலேயே அவர்கள் சொன்னதை நம்பியிருக்கிறார். அவர்கள் சொன்ன அத்தனை செய்திகளும் பங்குச்சந்தையை பற்றி உண்மையாகவே இருந்துள்ளது. மேலும் அவர்கள் கொடுத்த லிங்க்கிலேயே பணத்தை முதலீடு செய்ய சொல்லி இருக்கின்றனர். அவரும் பணத்தை முதலீடு செய்தபோதெல்லாம் அவருடைய தனிப்பட்ட கணக்கில் பணம் இருப்பது போன்று காண்பித்துள்ளது.
சிறிது சிறிதாக நான்கு நாட்களில் ரூ.20 லட்ச முதலீடு செய்த போது அவருடைய தனிப்பட்ட கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சம் இருப்பது போன்று காண்பித்துள்ளது. அதை நம்பிய தொழிலதிபர் கடந்த 10 நாட்களில் ரூ.1 கோடியே 26 லட்சம் முதலீடு செய்துள்ளார். அவருடைய கணக்கில் ரூ.6 கோடியே 69 லட்சம் பணம் இருப்பது போல் காண்பித்ததால், அதை எடுக்க முயற்சி செய்தபோது முடியவில்லை. ஜிஎஸ்டி கட்டுங்கள், வருமான வரி கட்டுங்கள் என்று பல்வேறு பணத்தை கேட்கவே இது போலியானதாக இருக்குமோ என்று பயந்து இணைய வழி காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.