ஆண்டிபட்டி, ஆக. 26: ஆண்டிபட்டி அருகே, மதுபோதையில் கீழே தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். ஆண்டிபட்டி அருகே உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர்(56). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சேகர், கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் உள்ள பயணிகள் இருக்கையில் மதுபோதையில் படுத்திருந்துள்ளார்.
அப்போது திரும்பி படுக்கும் போது இருக்கையிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி ஜெயந்தி ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.