பொன்னமராவதி, ஜூன் 26: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு புதிதாக பணியாளர்கள் நியமிக்க அரசு சார்பில் ஒன்றிய அலுவலகம் சார்பில் நேர்க்காணல் பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 23 பணியிடங்களுக்கான நேர்காணல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் பொறுப்பு இளங்கோ தாயுமானவர் தலைமையில் தாசில்தார் சாந்தா, ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. இதில், 55 பேர் கலந்து கொண்டனர். இந்த நேர்காணலை ஒன்றிய அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.