மயிலம், ஜூன் 20: மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தில் பைக் மீது மற்றொரு பைக் மோதியதில் கணவன், மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கட்றான்குளத்து தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் பரசுராமன் (29). இவர் தனது மனைவி பொன்னியுடன் மயிலம் அடுத்த விளங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது குலதெய்வ கோயிலான பொன்னி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் அவரது சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விளங்கம்பாடி பொன்னியம்மன் கோயில் எதிரே தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மற்றொரு இரு சக்கர வாகனம் வேகமாக வந்து பரசுராமன் ஓட்டி வந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பரசுராமன், அவரது மனைவி பொன்னி மற்றும் மற்றொரு பைக்கில் வந்த நபரும் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.