காங்கயம், ஜூன் 24: காங்கயம் அடுத்துள்ள மருதுறை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (49). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது வாகனத்தில் மருதுறையிலிருந்து நத்தக்காடையூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக கணேசன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசனை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கணேசன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.