திருவெறும்பூர், ஜூலை 2: திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மஞ்சத்திடல் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பித்து செல்ல முயன்றனர்.
அப்போது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்த பொழுது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்த அப்பாஸ் மகன் மன்சூர் (19), புதுக்கோட்டை சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விஸ்வநாத் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் சோதனை செய்தபோது 10 கிராம் எடை கொண்ட 10 கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.