Tuesday, July 15, 2025
Home மாவட்டம்சென்னை பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் 8 கல்லூரி மாணவர்கள் கைது: மன்னிப்பு கேட்டு கதறல்

பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் 8 கல்லூரி மாணவர்கள் கைது: மன்னிப்பு கேட்டு கதறல்

by Karthik Yash

பெரம்பூர், ஜூன் 18: வியாசர்பாடியில் பேருந்து மேற்கூரை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்ட 8 கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்தனர். சென்னையில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பாட்டு பாடி, நடனமாடியபடி பயணிகளுக்கு தொந்தரவு செய்வது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம், ரூட்டு தல பிரச்னையில் இருதரப்பு மாணவர்கள் மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று முன்தினம் தொடங்கின. மாணவ, மாணவியர் முதல் நாளில் உற்சாகமாக கல்லூரிகளுக்கு வந்தனர்.

இந்நிலையில், செங்குன்றம் காரனோடை அடுத்த எருமைவெட்டி பாளையம் பகுதியில் இருந்து பிராட்வே நோக்கி தடம் எண் 57 ஹெச் என்ற மாநகர பேருந்து நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையை கடந்து சென்றபோது இந்த பேருந்தில் பயணம் செய்த சுமார் 15க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். இதை பார்த்து பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பேருந்தை நிறுத்தி, அந்த மாணவர்களை கண்டித்துள்ளனர். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். இதை பார்த்த மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் இருந்து கீழே இறங்கினர்.

சிலர் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து பேருந்தை மீண்டும் பேருந்து ஓட்டுனர் இயக்கினார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது சம்பந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
இதுசம்பந்தமாக பஸ் டிரைவர் கொடுத்த புகாரின்படி, வியாசர்பாடி போலீசார், பொது சொத்துக்கு பங்கம் விளைவித்ததுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேரை நேற்று கைது செய்தனர். அப்போது, தெரியாமல் தவறு செய்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடுங்கள், என கைதான மாணவர்கள் போலீசாரிடம் கதறி அழுதனர். இதையடுத்து, அவர்களது பெற்றோர்களை காவல் நிலையம் வரவழைத்து, எழுதி வாங்கிக்கொண்டு, காவல் நிலைய ஜாமீனில் அவர்களை விடுவித்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi