வேலூர், ஜூலை 18: பள்ளியில் காலியாகும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினராக அப்பள்ளியில் படிக்கும் மாணவனின் பெற்றோரே நியமிக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாத சூழலின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உட்பட உறுப்பினர்களின் பிள்ளைகள் அப்பள்ளிகளில் படிக்க வேண்டும். அவர்கள் வேறு பள்ளிக்கு மாறினாலோ அல்லது குடும்ப பொருளாதார தேவை உட்பட ஏதேனும் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தாலோ, அந்த குழந்தையின் பெற்றோர் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினராக தொடர முடியாது.
அவ்வாறு காலியாகும் உறுப்பினர்களின் இடத்தில் வேறு ஒரு பெற்றோரை நியமிக்க இயலாது. அதன் பதவிக்காலம் முடியும் வரை அந்த இடம் காலியாக வைக்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் பொறுப்பு காலியானால் துணைத் தலைவருக்கு பொறுப்புகள் மாற்றப்பட வேண்டும். மீண்டும் பொறுப்புக்கு நியமிக்கப்படுபவர்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோராக இருத்தல் மிகவும் அவசியம். பள்ளி தலைமையாசிரியர் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மேலாண்மை குழுவில் மாற்றங்கள் செய்யக்கூடாது. இதுகுறித்து அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.