ஊத்துக்கோட்டை, ஆக. 26: பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் மாட்டுத்தொழுவமாக மாறிய ரேஷன் கடையை சீரமைத்து திறக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்தனர். பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஊராட்சி அலுவலகம் அருகில் முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரேஷன்கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு ரேஷன்பொருட்கள் வாங்கிவந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரேஷன் கடையின் பின்புறம் உள்ள சுவர் சேதமடைந்ததால் மூடப்பட்டது. மேலும் இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க அருகில் சின்ன காலணி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். இதனால் மூடிக்கிடக்கும் ரேஷன் கடையில் அப்பகுதியில் உள்ள மாடுகள் இரவு நேரத்தில் ஓய்வறையாக பயன்படுத்துகிறது. அதனால் இந்த ரேஷன் கடை மாட்டுத்தொழுவமாகவே மாறியுள்ளது. எனவே ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.