கருர், ஏப். 25: பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள குகை வழிப்பாதையில் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கருர் மற்றும் வெங்கமேடு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பெரியகுளத்துப்பாளையம் அருகே குகை வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த குகை வழிப்பாதையின் உட்புறம் அவ்வப்போது கால்நடைகள் சுற்றித்திரிவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கும் நிலையில், தற்போது குகை வழிப்பாதையிலும் கால்நடைகள் நடமாட்டம் உள்ளது. எனவே, குகை வழிப்பாதையில் எளிதான வகையில் வாகன போக்குவரத்து நடைபெற, கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, உரிமையாளர்களுக்கும் தேவையான விழிப்புணர்வை வழங்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.