பெரம்பலூர்,மே 11: பெரம்பலூர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில்- குரு பெயர்ச்சி விழாவையொட்டி இன்று(11ம்தேதி) சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
விசுவாவசு வருடம், சித்திரை மாதம் 28ம் தேதியான இன்று (11ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:19 மணிக்கு அருள்மிகு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குறிப்பாக இந்த குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய 5 ராசிக்காரர்கள் சுப பலன் பெறுகிறார்கள். மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிக் காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.இதனையொட்டி பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் அமைந்துள்ள, அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத அருள்மிகு பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவிலில், மதியம் 1:19 மணிக்கு குரு பகவான் மூல மந்திர ஜப பாராயணமும், பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடை பெறுகிறது.
இதன்படி காலை 10 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், 10.30மணிக்கு மூலமந்திர ஜபமும், மூல மந்திர ஹோமமும் நடக்கிறது. காலை 11மணிக்கு அபிஷேகம் ஆரம்பிக்கிறது. காலை 11.30மணிக்கு திரவிய ஹோமம், பூர்ணாஹூதி, மதியம் 12.30 மணிக்கு கடம் புறப்பாடும், கலச தீர்த்தம் அபிஷேகமும் நடை பெறுகிறது. மதியம் 1.19 மணிக்கு மகா தீபாரதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படுகிறது.
குரு பெயர்ச்சிக்காக அபிஷேக பொருட்கள், ஹோம பொருட்கள் கொண்டு வருபவர்கள் காலை 10 மணிக்குள் திருக்கோயிலில் தரும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். குரு பெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் பெரம்பலூர் உதவி ஆணையர் உமா, கோவில் செயல் அலுவலர் ரவிச் சந்திரன் மற்றும் தர்ம பரி பாலன சங்கத்தினர் இணைந்து செய்துள்ளனர்.