பெரம்பலூர், ஆக. 18: பெரம்பலூர் அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் – துறையூர் சாலையில் தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கு எதிரில், அரணாரையைச் சேர்ந்த தங்கராஜ் மகன் குணசேகர் (59) என்பவர், சொந்தமாக காளான் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 16ம் தேதி நாள் முழுவதும் பண்ணையில் வேலை செய்துவிட்டு மாலை 6 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். மீண்டும் நேற்று (17ஆம் தேதி) பகல் 12.15 மணிக்கு பண்ணையிலுள்ள கிணற்றில் பார்த்தபோது, சுமார் 55 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, கிணற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து, சடலமாக மீட்கப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எவ்வாறு கிணற்றில் விழுந்து இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.