பெரம்பலூர், அக்.20: பெரம்பலூரில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 2 இடங்களில் கலைத் திருவிழா நடைபெற்றது. பெரம்பலூர் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 2 இடங்களில் நடைபெற்றது. இதன்படி பெரம்பலூர் துறையூர் சாலையில் சாரண சாரணியர் அரங்கத்தில் கவின்கலை (ஆர்ட்), மொழித்திறன்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) போட்டிகளும் நடைபெற்றன.
பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள முத்தையா மெட்ரிக் பள்ளியில் இசை வாய்ப்பாட்டு, நடனம், கருவி இசை, நாடக போட்டிகளும் நடைபெற்றது. போட்டியில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 468 மாணவர்கள் கலந்து கொண்டனர். கலைத்திருவிழா போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கி தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தவும் கலைப் பண்பாட்டினை வளர்த்திடவும், பள்ளிகள் அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் முதலிடம் பெற்ற மாணவர்கள் வட்டார அளவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கலந்து கொள்கின்றனர்.