பெரம்பலூர், ஜூலை 9: பெரம்பலூர் மாவட்ட ஒருங்கணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகளில் ரூ.59 லட்சம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், பெரம்பலூர் முதன்மை அமர்வு நீதிபதியுமாகிய பல்கிஸ் தலைமையில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில், ஒரு அமர்வில் பணியில் இருக்கும் பெரம்பலூர் மாவட்ட தலைமைக்குற்றவியல் நீதித்துறை நடுவர் மூர்த்தி, பெரம்பலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் என் 2. சங்கீதா சேகர் ஆகியோர் அமர்ந்து நிதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு கண்டனர். 2வது அமர்வில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணையன் மற்றும் மூத்த வழக்கறிஞர் காமராசு ஆகியோர் அமர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வங்கிகளின் வாராக்கடன் வழக்குகளை எடுத்து சமரசமாக பேசி முடித்தனர்.
இதில் நீதிமன்றத்தில நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை எடுத்து அதில் 22 வழக்குகள் சமரசமாக பேசி முடிக்கப்பட்டது. மோட்டார் வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் வங்கிவாராக்கடன் வழக்குகள் உட்பட ரூ.59,05,400 இழப்பீட்டு தொகையாக காப்பீட்டு நிறுவனம் மூலம் பெற உத்தரவு வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் பெரம்பலூர் மாவட்ட சார்பு நீதிபதி அண்ணாமலை உட்பட வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சந்திரசேகர் செய்திருந்தார்.