சிவகங்கை, ஏப்.24: சிவகங்கை ஆயுதப்படையில் 30 வயதுடைய பெண் போலீஸ் பணிபுரிந்து வருகிறார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் இவருடைய கணவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியூரில் உள்ள கணவருக்கும், இவருக்கும் இடையே மீண்டும் செல்போனில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கணவரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து கணவர் ஆயுதப் படை அலுவலகத்திற்கு போன் செய்து தனது மனைவி தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், காப்பாற்றுமாறும் கூறியுள்ளார். உடனடியாக பணியில் இருந்த போலீசார் பெண் போலீஸ் வீட்டிற்கு சென்றனர். அப்போது பேனில் தூக்கு மாட்டி உயிருக்கு போராடி கொண்டிருந்த பெண் போலீசை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது